ஈஸ்டர் தாக்குதல்:யாரும் தப்பவே முடியாது... அடிப்படைவாதத்துக்கு இனி இடமில்லை... ஒரே நாடு ஒரே சட்டம்.... பௌத்த போதனைக்கு ஏற்பவே ஆட்சி...
Thu, 04 Feb 2021 09:18:34 +0530
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் யாரும் இலகுவில் தப்பிக்க முடியாது என்றும் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு -07,சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெற்ற இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்:
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு நாட்டின் அபிவிருத்தியை மேற்கொள்ளும் சவால் இப்போதும் எம்முன்னே உள்ளது.
எமது மரபுரிமைகள்,இறைமை போன்றவை பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்த சந்தர்ப்பத்தில் 69 லட்சம் மக்கள் எனக்கு வாக்களித்தது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை நீக்கி நாட்டைப் பாதுகாக்கவே.
நான் சிங்கள பௌத்த தலைவன்.பௌத்த போதனைக்கு ஏற்பவே நான் இந்த நாட்டை நிர்வகிக்கிறேன்.இருப்பினும்,ஏனைய மதங்களும் இனங்களும் சமமாக நடத்தப்படும்.
நாட்டை நேசித்து-நாட்டின்மீது தீவிர பற்று வைத்து நாட்டை நிர்வகிக்கும் தலைமைக்கு எதிராக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் காலாகாலமாக தேச விரோத சக்திகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்டே வருகின்றன.
இவர்கள் மிகவும் நுணுக்கமான முறையில்பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு நாட்டு மக்களை பிழையாக வழிநடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கின்றனர்.
உண்மையைத் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுப்போமேயானால் எந்தவொரு சக்தியாலும் எமது மக்களை ஏமாற்றவோ பிழையாக வழிநடத்தவோ முடியாது.
நாட்டின் இறைமையையும் ஆட்புல ஒருமையையும் பாதுகாப்பேன் என்று நான் இந்த மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளேன்.அந்த வாக்குறுதியை நான் தொடர்ந்து பாதுகாப்பேன்.
நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் சம உரிமை உண்டு.சமயங்களை அடிப்படையாகக்கொண்டு மக்களை பிரிப்பதை நாம் வெறுக்கிறோம்.
எல்லா பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் அதேவேளை,ஒரே நாடு ,ஒரே சட்டம் என்ற கொள்கையை நான் உறுதியாகப் பின்பற்றுகிறேன்.
ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி கொள்ளை தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்குமாறு நான் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை என்னிடம் இப்போது கிடைத்துள்ளது.அதில் உள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.இந்தத் தாக்குதலுக்கு அனுசரணை வழங்கிய மற்றும் தொடர்புபட்ட எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.அதற்கு நாம் இடங்கொடுக்கமாட்டோம்.
அதேபோல் அடிப்படைவாதம் மீண்டும் இந்த நாட்டுக்குள் தலை தூக்குவதற்கு நாம் இடங்கொடுக்கமாட்டோம்.என்றார்.